Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, August 28, 2011

சிறகுகள் தேடி....


”எனக்கு பறவைகளிடம் மிகவும் பிடித்தது அதன் சிறகுகள் ..எங்கு வேண்டுமானாலும் பறந்து போக முடியும் அதன் நிலை என்னை மிகவும் கவர்கிறது..அதற்காக அது கர்வப்பட்டுக்கொள்ளலாம்”

அது ஒரு விழிப்பும் இல்லாத உறக்கமும் இல்லாத நிலை..ஏதோவொரு மயக்க நிலை மனம் மட்டும் விழித்து இருந்தது..ரொம்ப சந்தோசமாக கூட இருந்ததுன்னு சொல்லலாம்..அவன் என் கூட இருந்தான்...கூட என்றால் ஏதாவது பேசிக்கொண்டும் சிரிக்க வைத்துக்கொண்டும் இருந்தான்..நான் அவனின் தோள்களில் சாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்..சுற்றிலும் பார்பவையெல்லாம் பசுமையாகவும் இனிமையாகவும் இருந்தது..என்ன பேசினான் என்று தெரியவில்லை

நான் மிக ரசித்துக்கேட்டுக்கொண்டிருந்தேன்...ஒரு அற்புத உலகம் சிருஷ்டிக்கப்பட்டு நானும் அவனும் மட்டுமே அதில் இருப்பதாய் நினைத்தேன்.நேரம் காலம் அறுபட்டு எல்லாம் ஏகாந்தமாய் தோன்றியது..பேசியதும், இசைத்ததும் ஒன்றாய் நடந்ததுமென பொழுதுகள் கரைந்து கொண்டிருந்தது..

அப்போது தான் அவன் சொன்னான் “கிளம்புகிறேன்” ”நானும் “ என்கிறேன்..”உன்னால் வரமுடியாது, உன்னிடம் சிறகுகள் இல்லை”அப்பொழுது தான் கவனிக்கிறேன்..ஆமாம் என்னிடம் சிறகுகள் இல்லை..”எங்கே என்னுடயது யாரிடம் கேட்பது” என்கிறேன்..”அங்கே ஒளி நிறைந்து காணப்படுகிறதே அங்கே போய் கேள்’ என்று சொல்கிறான்..

சர்வமும் நானென சொல்வதாய் ஒரு ஒளி பிம்பம் அதை வணங்கி பின் கேட்கிறேன் ”என் சிறகுகள் நான் பறக்கணும்” என்கிறேன்..ஒளி என்னை நன்றாய் ஊடுருவி பார்த்தது போலும், பின் அசரிரீயாக ஒலித்தது “உன் சிறகுகள் உன் குடும்பத்திற்காய் உன்னிடமிருந்து எடுத்து கொடுக்கப்பட்டு விட்டது,அதோ பார் உன் கணவன் உன் குழந்தை” என்று காண்பிக்கப்பட்டவர்கள் ஒரு ஓரமாக நின்று என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்..எனக்கு ஒன்றும் தெளிவாகவில்லை..”யார் கணவன் யார் குழந்தை எதற்கு என்சிறகுகள் பறிக்கப்படவேண்டும் ” எனும் என் வினாவுக்கு “அவர்கள் உன்னை சார்ந்தவர்கள் அவர்களுக்கு சிறகுகள் இல்லை உன்னிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது இதுவே உலக நியதி” என்றும் சொன்னது..

எனக்கு திருமணமாகி விட்டதா? எப்போது ..என்னவானாலும் என் சிறகுகள் ஏன் பறிக்கப்படவேண்டும்..எதயும் நம்ப மறுத்த மனம்..சட்டென நியாபகம் வர அம்மாவை காணவில்லயே..அவர்களுக்கு தெரியாமல் நான் எதுவும் செய்வதில்லையே..அம்மாவிற்கு கண்டிப்பாய் தெரிந்திருக்கும் அவர்களை தான் கேட்கனும் “அம்மா அம்மாஆஆஆ...”

“என்ன என்னடி எதுக்கு இப்படி கூப்பாடு போட்ற, விடிந்தது விடியாததுமா?..கனவு எதாவது கண்டியா? சரி சரி எந்திரி” சொல்லிவிட்டு நகரும் அம்மாவிடம் சொல்கிறேன் “என் சிறகுகளை தரமாட்டேன் எனக்கு வேண்டும்” அழுத்தமாய் நான் சொன்னதற்கு அர்த்தமாய் சிரித்து நகர்கிறார் அம்மா...

4 comments:

  1. க்ளாஸ், பக்கா. கிரேட் :-))

    ReplyDelete
  2. @murli..

    Anbu Murli...

    Thanks..very Thanks..Thank u pa...

    ReplyDelete
  3. "Kavithaiyai oru kathai"!!!! alla alla
    "kathaiyai oru kavithai"
    eppai solla intha padaippai!!

    Nanum thedukirean ennudaya sirakukalai!!
    .........
    Sollunkalean kidaikuma??

    ReplyDelete
  4. "Kavithayagiya kathaiyaa" or "Kathaiyagiya Kavithaiyaa"

    enge ennudaiyathu??? nanum thedukirean en sirakukalai!!!!

    ReplyDelete